Sunday, April 29, 2012

அளபெடைகள்

சார்பு எழுத்துகளில் உயிர்மெய், ஆய்தம் பற்றிப் படித்தோம். அடுத்ததாக, அளபெடைகள் பற்றிப் பார்ப்போம். அளபெடை, பெயரைக்கேட்டாலே ஏதோ சாப்பிடும் உணவுவகை போல் ஒலிக்கிறதே? கார அடை, இனிப்பு அடை போல என்று தோன்றினாலும் கூட உண்மையிலேயே அளபெடைகளை இனிப்பு அடைக்கு ஒப்பாக எண்ணலாம்!!!

செய்யுளில் ஓசை குறையுமிடத்திலும் அல்லது ஓசை குறையாத இடத்தில் இனிமை கருதியும், ஓசை நயத்துக்காக அளபெடைகள் சேர்க்கப்படும். அவை இரு வகைப்படும்.

1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை

உயிரளபெடை

உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும்.

ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ ஐஇ ஒளஉ

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களேயானால், 5 குறிலுக்கு 5 நெடில்கள் இருப்பதுதானே முறையாகும். ஆனால், நெடில்கள் மட்டும் ஏன் இரண்டு அதிகமாக இருக்கிறது? தமிழில் “ஐ ஒள” இரண்டையும் கூட்டுயிர் என்பார்கள். அதாவது ஐ என்பது அஇ (அ) அய் என்றும் ஒள என்பது ஒஉ (ச்) அவ் என்றும் ஒலிப்பதைக் கேட்கலாம். நாம் ஐ என்பதை அஇ என்றும், ஒள என்பதை ஒஉ என்றும் கூட்டுயிராகக் கொள்வதாலேயே ஐ-க்கு இ-யும், ஒள-க்கு உ-வும் இனக் குறில்களாகின்றன.

வரலாறு எனும் திரைப்படத்தில் “இன்னிசை அளபெடையே” என்று ஒரு பாடல் இருக்கிறது. அது என்ன உயிரளபெடை, ஒற்றளபெடைத் தெரியும். இதுவென்ன இன்னிசை அளபெடை என்றெண்ண வேண்டாம். உயிரளபெடையை நான்கு வகைப் படுத்தலாம். அவை:

1. இயற்கை அளபெடை
2. செய்யுளிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
4. சொல்லிசை அளபெடை

குறிப்பு: உங்களுக்கு அளபெடைகள் மீது அதிக ஆர்வம் தோன்றினால் திருக்குறளைப் படியுங்கள். அனைத்து விதமான அளபெடைகளையும் திருக்குறளில் பார்க்கலாம்.

இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நிற்றல் இயற்கை அளபெடையாகும்.

எ.கா. மரூஉ, மகடூஉ, பேரூர் கிழாஅன்

செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்தல் செய்யுளிசை அளபெடையாகும்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

யாப்பிலக்கணம் பற்றிச் சொல்லாமல் செய்யுளிசை அளபெடையை விளக்குவது சற்று சிரமம். அதனால், வேகமாகவும் எளிதாகவும் யாப்பிலக்கண அடிப்படைகளைத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது புரிந்து கொள்ள கடினமாக இருந்தால், யாப்பிலக்கணம் நன்றாகப் படித்தவுடன், மறுபடி ஒருமுறை செய்யுளிசை அளபெடையை நன்றாகப் படிக்கவும்.

யாப்பு (Prosody) – ஒரு எளிய விளக்கம்

யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். இதற்கு பாட்டு, தூக்கு, தொடர்பு, கவி, செய்யுள் என்றும் பொருள் வரும்.

உறுப்புகள்

யாப்பிலக்கண உறுப்புகள்:

1. எழுத்து (Letter/Phone)
2. அசை (Syllable/Metreme)
3. சீர் (Metrical foot)
4. அடி (Metrical line)
5. தொடை(Ornament/Ornamentation)

எழுத்து

இவ்வளவு நேரம் எழுத்திலக்கணம் பற்றிதான் நாம் படித்து வருகிறோம். ஆதலால், அதை மறுபடியும் நாம் விளக்கமாகப் பார்க்கத் தேவையில்லை.

அசை

எழுத்துகள் ஒன்றோ இரண்டோ அசைந்து இசைபட நிற்பது. சுலபமாக நினைவில் கொள்ள – எழுத்துகள் சேர்ந்தால் அசையாகும் என்று கொள்ளலாம். அவை இரண்டு வகைப்படும்.

1. நேர் அசை
2. நிரை அசை

நேர்

குறிலோ நெடிலோ தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது தனிஉயிர் (அ) ஓருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. தனிக்குறில் – ம
2. குறிலொற்று – மண்
3. தனி நெடில் – மா
4. நெடிலொற்று – மான்

எ.கா. ரா/ணி வந்/தாள் – தனி நெடில்/தனிக்குறில்/குறிலொற்று/நெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நேரசைகளும் வருவதைக் கவனிக்கவும். “நேர்” என்ற சொல்லே நேரசைக்கு உதாரணமாகும் (நெடிலொற்று).

நிரை

குறிலிணை (இரண்டு குறில்கள் அடுத்தடுத்து வருதல்) அல்லது குறிநெடில் தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது ஈருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. குறிலிணை – புலி
2. குறிலிணையொற்று – முறம்
3. குறிநெடில் – புறா
4. குறிநெடிலொற்று – முகாம்

எ.கா. கவி/நிலா புலம்/பினாள் – குறிலிணை/குறிநெடில்/குறிலிணையொற்று/குறிநெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நிரையசைகளும் வருவதைக் கவனிக்கவும். நிரை என்ற சொல்லே நிரையசைக்கு உதாரணமாகும் (குறிலிணை. “ரை” என்பது ர் + ஐ – ஐகாரக்குறுக்கமாதலால் “ரை” குறிலாகக் கருதப்படும்).

சீர்

அசையால் அமைவது சீர் ஆகும். இதன் வகைகள்:

1. ஓரசைச்சீர்
2. ஈரசைச்சீர்
3. மூவசைச்சீர்
4. நாலசைச்சீர்

ஓரசைச்சீர் வகைகள்

சீர் வாய்ப்பாடு எ.கா.
நாள் நேரசை கல்
மலர் நிரையசை தமிழ்
காசு நேர்பு நன்று
பிறப்பு நிரைபு உலகு


நேர்பு – நேரசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நேர்பு ஆகும். குற்றியலுகரம் சார்பு எழுத்து வகைகளில் ஒன்றாகும். அது குறித்து பின்னால் விரிவாகப் பார்ப்போம்.

நிரைபு – நிரையசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நிரைபு ஆகும்.

இப்போதைக்கு இந்த யாப்பிலக்கண அடிப்படை புரிந்தால் போதுமானது. இப்பொழுது நாம் முதலில் தொடங்கிய செய்யுளிசை அளபெடைக்குச் செல்வோம்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

”தரூஉம்” என்பது ”தரூம்” என்றிருந்தால் நிரையாசையாகும்; அப்படியிருந்தால் அடுத்த வரும் சீர் நேரில் தொடங்கவேண்டும். ஆனால் வினைநலம் எனும் சீரில் “வினை” என்பதும் நிரையாகவே வருவதால், தளை தட்டி வெண்பா விதிகளை மீறிவிடும். 1330 குறள்களும் குறள் வெண்பாவாகும் என்பதை நினைவில் கொள்க. ஆகவை “தரூம்” என்பது ஓசை குன்றி வருவதால், “தரூஉம்” என்று அளபெடுத்து வருவதால் இது செய்யுளிசை அளபெடையாகும்.

இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகல் ஆகி, அளபெடுத்தல்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இச்செய்யுளில் “கெடுப்பதும்”, ”எடுப்பதும்” என்று வந்தாலும் பொருளும் ஓசையும் குன்றாது. ஆயினும் “து” என்னும் குறில் “தூஉம்” என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுத்து வந்திருப்பதால் இன்னிசை அளபெடையாகிறது.

சொல்லிசை அளபெடை

ஒரு பெயர்ச் சொல்லை (Noun) வினை(Noun) எச்சமாக மாற்றுதல். வினை எச்சம் குறித்து சொல்லிணக்கத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

நசை என்ற பெயர்ச்சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்ற வினை எச்சமாகி விடும். எனவே நசைஇ என்பது சொல்லிசை அளபெடையாகிறது.

ஒற்றளபெடை

ஓசை நயத்திற்காக ஒற்று (மெய்) எழுத்துகள் அளபெடுத்து வருதல்.

எ.கா. கலங்ங்கு நெஞ்சம். ‘ங்’ என்னும் ஒற்று எழுத்து அளபெடுத்திருப்பதால் ஒற்றளபெடையாகிறது. தனக்குரிய மாத்திரை அளவினை விட அதிகமாக ஒலிப்பதால் அளபெடையாகிறது.

No comments:

Post a Comment