Thursday, April 26, 2012

எழுத்திலக்கணம்

தமிழிலக்கணம் 5 வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவதான எழுத்திலக்கணம் பற்றிப் பார்ப்போம். அதற்கும் முன்பு எழுத்துகளின் ஒலி அளவைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

ஒலியளவு (அ) மாத்திரை
எழுத்துகள் ஒலிக்கும் அளவு மாத்திரை எனப்படும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் (blink of an eye) நேரத்தையோ அல்லது கை சொடுக்கும் (snap of a finger) நேரத்தையோக் குறிக்கும்.

எழுத்து வகைகள்
1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகள் (Primary Letters) உயிரெழுத்துகள் (Vowels) பன்னிரெண்டும், மெய் எழுத்துகள் (Consonants) பதினெட்டும் முதல் எழுத்துகள் எனப்படும்.

உயிர் எழுத்துகள் (Vowels)
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒ ஒள

உயிர் எழுத்து வகைகள்
1. குறில் (Short Vowel) - அ இ உ எ ஒ - 1 மாத்திரை
2. நெடில் (Long Vowel) - ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஒள - 2 மாத்திரை

மெய் எழுத்துகள் (Consonants)
இதற்கு ஒற்று எழுத்துகள் என்ற பெயரும் உண்டு. இவை தனித்து வராது; சொல்லுக்கு முதலில் வராது. சில வேற்று மொழி சொற்களை தமிழில் அப்படியே எழுதும்போது முதலில் வரும். எ.கா - Cricket = க்ரிக்கெட் (சிலர் கிரிக்கெட் என்றும் எழுதுவார்கள் :) )

உயிர் - 12 + மெய் - 18 = 30 முதல் எழுத்துகள்
உயிர் = ஆவி, மெய் = உடல்
மெய்/ஒற்று ஒலியளவு = 1/2 மாத்திரை

மெய் எழுத்து வகைகள்
1. வல்லினம் - க் ச் ட் த் ப் ற் - இவை அழுத்தமான ஓசையை உடையவை.
2. மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன் - இவை மென்மையான ஓசையை உடையவை.
3. இடையினம் - ய் ர் ல் வ ழ் ள் - வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட ஓசையை உடையவை.

எளிதாக உச்சரிக்க வசதியாக இருக்குமென்பதற்காக அகர எழுத்துகளைப் பயன்படுத்துவோம். அதாவது, க ச ட த ப ற வல்லினமாம், ங ஞ ண ந ம ன மெல்லினமாம், ய ர ல வ ழ ள இடையினமாம் என்று சொல்லுவார்கள்.

No comments:

Post a Comment