Friday, January 29, 2016

வெண்பா உரையாடல் - பாகம் 4


பாகம் – 4

சு: என்னடா யாப்புக்குள்ள போகலாம்னு சொல்லிட்டு அப்புறமா ஆளையே காணோம்.
ரா: மாப்ள, ஆஃபீஸ் வேலை, குடும்ப பாரம், அப்புறம் வெக்கேஷன் அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கினதுல உனக்கு யாப்பை சொல்லித்தர மறந்துட்டேன். இப்ப என்னடா? விட்ட இடத்துலேருந்து தொடங்கிட்டாப் போச்சு. 
சு: மாத்திரையில விட்ட. அடுத்தது என்னடா?
ரா: நேரா யாப்போட உறுப்புகளுக்குப் போயிடலாம். நாம படிக்கும்போது படம் வரைஞ்சு பாகம் குறிப்போம்ல அது மாதிரிடா.
சு: அப்ப ரொம்ப ஈஸியாப் புரிஞ்சுக்கலாம்னு சொல்லு.
ரா: ஆமாம். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இந்த ஆறும் யாப்போட உறுப்புகள் அப்படின்னு யாப்பிலக்கணம் சொல்லுது. அதுல எழுத்து பத்தி ஏற்கனவே நாம பேசிட்டோம். என்னடா மறுபடியும் புதுசா ஆறு இருக்குங்கிறானேன்னு பயந்துடாத.
சு: யாப்புக்குள்ள நீ வரும்போது இந்த மாப்புக்கென்ன பயம். பொறுமையா கவனிச்சு புரிஞ்சிக்கிறேன். 
ரா: நண்பேண்டா. இந்த ஆர்வத்துக்கு நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவடா. சரி வேகமா எழுத்தையும் இன்னொரு தடவை பார்த்துடலாம். முதலெழுத்துகள்ல: உயிர் – 12, அதுக்குள்ள குறில் – 5, நெடில் – 7; மெய் – 18, வல்லினம் – 6, மெல்லினம் – 6, இடையினம் – 6. சார்பெழுத்துகள் – 10: அதுல முக்கியமானது என்னன்னா: உயிர்மெய் – 216, ஆய்தம் – 1 குற்றியலுகரம். மத்த ஏழு சார்பெழுத்தும் பின்னால படிக்கலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரைகள், மெய்க்கு ½ மாத்திரை, ஆய்தத்துக்கு ½ மாத்திரை, உயிர் மெய்க்கு எப்பவுமே அதுல இருக்குற உயிரெழுத்தோட மாத்திரைதான் வரும்.
சு: பரீட்சைக்கு ஒரு தடவை வேகமா புரட்டிப் பார்ப்போமே. அது மாதிரி சுருக்கமா அதே நேரத்துல வேகமாவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றிடா.
ரா: விடுடா. இதெல்லாம் எனக்குப் பெருமையா? கடமைடா கடமை. சரி, இப்போ அசைக்குள்ளப் போகலாம். எழுத்துகள் ஒன்றோ அதுக்கும் மேற்பட்டோ சேர்ந்து இருந்தா அது அசை. எந்த வார்த்தையா இருந்தாலும் அதை நீ அசையா பிரிச்சி மேஞ்சிடலாம்.
சு: அப்படின்னா வார்த்தையத்தான் அசைன்னு சொல்றோமாடா?
ரா: அது அந்த வார்த்தையப் பொறுத்ததுடா. ஒரு வார்த்தைக்குள்ளேயே சில அசைகள் இருக்கலாம். ஒரு வார்த்தையே ஒரு அசையாக்கூட இருக்கலாம். நான் உனக்கு உதாரணம் சொல்லும்போது நல்லாப் புரியும். சரியா?
சு: புரியுற மாதிரி இருக்கு. ஆனாப் புரியாத மாதிரியும் இருக்கு. ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் அன் எக்ஸாம்பிள். நான் ஒரு உதாரணத்துக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.
ரா: தோடா. வந்துட்டாரு மேஜர் சுந்தர்ராஜன். அசையை நேர், நிரை அப்படின்னு ரெண்டாப் பிரிக்கலாம். 1 தனிக்குறில் (அ) 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல மெய் (அ) 1 தனிநெடில் (அ) 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நேரசைன்னு சொல்லுவோம். இப்போ சில வார்த்தைகளை அசை பிரிச்சு உனக்கு விபரமா விளக்குறேண்டா.
சு: சரிடா. அப்படின்னா நேர், நிரை இதெல்லாம் ஒரு காம்பினேஷன் (அ) ஃபார்முலா மாதிரின்னு சொல்லலாமாடா?
ரா: அதேதாண்டா. எழுத்துகள் சேர்ந்து வந்தா அசைன்னு சொன்னேன். நீ அதை காம்பினேஷன்னு சொல்லிக்கணும்னா சொல்லிக்கடா. உனக்கு அது சுலபமா இருந்தா அப்படியே வச்சுக்க. ஒரு வார்த்தையில மெய்யெழுத்துகள் வந்தா அது ரொம்ப வசதிடா. ஏன்னா அந்த மெய்யெழுத்துகளோட ஒரு அசை முடிஞ்சிடும். அசை பிரிக்கும்போது எத்தனை மெய்யெழுத்துகள் இருந்தாலும் மதிப்பு கிடையாது. அது எல்லாத்தையும் அதுக்கு முன்னால இருக்குற எழுத்தோட சேர்த்து அசை பிரிச்சுடுவோம். இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம். 
கல் – இந்த வார்த்தைல ‘க’ அப்படிங்கிற 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல ’ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால இது ஒரு அசை அதுவும் நேரசை. நான் சொன்ன மாதிரி இதுல ‘ல்’ அப்படின்னு ஒரு மெய் எழுத்து வந்ததால வசதியா அதோட ஒரு அசையை பிரிச்சிடலாம்.
கால் – இந்த வார்த்தைல ‘கா’ அப்படிங்கிற 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல ‘ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால் இது ஒரு அசை அதுவும் நேரசை. இப்பப் புரியுதா?
சு: அருமைடா. கல், கால் இதைத்தான் ஒரு வார்த்தையே கூட அசையா வரலாம்னு சொன்னியா? இப்பப் புரியுதுடா. அப்படியே நிரையசையைப் பத்தியும் சொல்லிடுடா.
ரா: கட்டாயமா. 1 குறிலிணை அதாவது 2 குறில்கள் ஜோடியா வர்றதுதான் இணை (அ) 1 குறிலிணைக்குப் பக்கத்துல மெய் (அ) 1 குறி நெடில் அதாவது 1குறிலை அடுத்து 1 நெடில் வர்றது (அ) 1 குறி நெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நிரையசை. இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம். 
கடல் – இந்த வார்த்தைல ‘கட’ அப்படிங்கிற குறிலிணைக்கு ( ‘க’ குறில் ‘ட’ குறில். இந்த இரண்டு குறில்களும் அடுத்தடுத்து ஜோடியா வந்திருக்கிறதால இது குறிலிணை) அடுத்து ‘ல்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை. 
முகாம் - இந்த வார்த்தைல ‘முகா’ அப்படிங்கிற குறிநெடிலுக்கு ( ‘மு’ குறில் ‘கா’ நெடில். ஒரு குறிலுக்குப் பக்கத்துல நெடில் வந்திருக்கிறதால இது குறிநெடில்) அடுத்து ‘ம்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை.
சு: அடிடா சக்கை. எனக்கு நல்லாப் புரியுதுடா. சரிடா இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாமா? நம்மளோட பேரையே அசை பிரிக்கட்டுமா? ராஜா – ’ரா’ 1 நெடில் ‘ஜா’ ஒரு நெடில். உன் பேர்ல 2 அசைகள் இருக்கு. அது ரெண்டுமே நேரசைகள். சுப்ரமணி – ‘சுப்’ 1 குறிலுக்குப் பக்கத்துல மெய், ‘ரம’ – குறிலிணை ‘ர’-ங்கிற குறிலுக்குப் பக்கத்துல ‘ம’-ங்கிற குறில் வந்திருக்கிறதால இது குறிலிணை, ‘ணி’ – 1 குறில். என் பேர்ல 3 அசைகள் இருக்கு. 1 நேரசை அடுத்து 1 நிரையசை கடைசியா 1 நேரசை. எப்பூடி?
ரா: அப்படிப் போடுடா. எனக்குப் புல்லரிக்குது. மாடு அசை போடுற மாதிரி மண்டைய ஆட்டிக்கிட்டே இருந்தியே உனக்கு எவ்வளவு புரிஞ்சிருக்குமோன்னு நெனச்சேன். ஆனா நீ அட்டகாசமா நம்ம ரெண்டு பேர் பேரையும் அசை பிரிச்சு அசத்திட்டேடா.
சு: கெடச்ச கேப்ல என்னை மாடுன்னு சொல்லிட்ட. பரவாயில்லடா. அடிக்கிற கைதான் சொல்லியும் குடுக்கும்.
ரா: மாப்ள, ‘மாடு’ன்னா தமிழ்ல செல்வம் அப்படின்னு கூட ஒரு அர்த்தம் இருக்குடா. உனக்குத் தமிழ்ச் செல்வம் பெருகிடுச்சுன்னு சொல்லலாம்ல.
சு: எதுக்கு இப்படி சமாளிக்கிற. எப்போ மத்த உறுப்புகளை சொல்லித் தரப்போற?
ரா: அடுத்த தடவை நாம் சந்திக்கிறப்ப சீர், அடி, தளை மூணும் சொல்லித்தர்றேன்.
சு: சரிடா.

வெண்பா உரையாடல் - பாகம் 3


பாகம் – 3

ரா: சுப்ரமணி நாம போன தடவை சந்திச்சப்ப எழுத்து இலக்கணம் பத்திப் பேசினோம். அப்ப உன் கிட்ட எழுத்தோட ஒலி அளவைப் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். எழுத்தை உச்சரிக்க நாம எடுத்துக்குற நேரத்தை மாத்திரைன்னு சொல்வாங்க
சு: என்னது மாத்திரையா? என்னடா இலக்கணம் சொல்லித்தாடான்னா மருத்துவத்துக்குப் போயிட்ட.
ரா: இந்த மாதிரி மொக்கை ஜோக்கெல்லாம் அடிக்கப்படாது. கண் சிமிட்டுற நேரத்தையோ அல்லது கை சொடுக்குற நேரத்தையோ ஒரு மாத்திரைன்னு சொல்லலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரை மெய்யெழுத்து ½ மாத்திரை ஆய்த எழுத்து ½ மாத்திரை. மெய்யெழுத்த ஒற்று எழுத்துன்னும் சொல்லலாம். சரி இப்ப நாம சார்பு எழுத்துக்குள்ள போலாம்.
சு: அப்பாடா ஒரு வழியா முதல் எழுத்துகளை முடிச்சிட்ட.
ரா: சார்பு எழுத்துகள்ல 10 வகைகள் இருக்குடா. எல்லாத்தோட பேரை மட்டும் இப்போதைக்கு தெரிஞ்சு வச்சுக்க. வெண்பா எழுதும்போது எது எதெல்லாம் அடிக்கடி பயன்படுமோ அப்பப்போ அந்த சார்பு எழுத்துகளை மட்டும் விளக்கமா சொல்லித் தர்றேன்.
சு: அப்படியே ஆகட்டும் மச்சி.
ரா: உயிர் மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், 4 குறுக்கங்கள் (ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்) இதுதான் சார்பு எழுத்து வகைகள். என்ன கண்ணைக் கட்டுதா?
சு: கட்டுற மாதிரி இருந்திச்சு. ஆனால், நீதான் முன்னாலேயெ எல்லாத்தையும் இப்பவே விளக்கமாப் பார்க்க வேணாம்னு சொல்லிட்டியே. அதனால கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கேன்.
ரா: உயிர் மெய், ஆய்தம் அது ரெண்டுமே ஈஸிதான். உயிர் + மெய் = உயிர் மெய். இன்னைக்கு மாத்திரை பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேன்ல. ஞாபகம் இருக்கா?
சு: நல்லாவே ஞாபகம் இருக்கு.
ரா: நல்லது. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். ஒரு சாம்பிள் பார்க்கலாம். ’கு’ அப்படிங்கிற உயிர் மெய்யை க் + உ அப்படின்னு பிரிக்கலாமில்லையா. அதுக்கு எவ்வளவு மாத்திரைன்னு சொல்லு.
சு: இது என்ன பெரிய கணக்கா? க் - மெய்யெழுத்து ½ மாத்திரை, உ - குறில் அதனால 1 மாத்திரை, மொத்தம் 1½ மாத்திரை. நாங்கள்லாம் கணக்குல பின்னுவோம்ல.
ரா: அடேய், 1 + ½ = 1½ அப்படிங்கிற கணக்கெல்லாம் சரிதான். ஆனால், நான் என்ன சொன்னேங்கிறதையே காதுல வாங்காம இப்படித் தப்புத்தப்பாக் கணக்கு போட்டு 7½ யைக் குடுக்காதடா. இன்னொரு தடவை சொல்றேன். நல்லாக் கேட்டுக்க. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். இப்ப சொல்லு ‘கு’-க்கு எவ்வளவு மாத்திரை?
சு:. ஓஹோ. சாரிடா. ஆமா என்ன நடந்திச்சு? உயிர் மெய் எழுத்துல உயிரோட மாத்திரை மட்டும்தான் கணக்குல எடுக்கணும்னு சொன்ன. நானும் கேட்டேன். அப்புறம்.. அப்புறம்…
ரா: டேய் நிறுத்துடா. என்ன மெடுலா ஆப்ளங்கேட்டானு காமெடி பண்றீங்களோ? நடுவுல கொஞ்சம் இலக்கணத்தைக் காணும்னு நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்.
சு: சும்மா ஜாலிக்குடா. கோவிச்சுக்காத. கு-வுக்கு 1 மாத்திரை. க் + உ அப்பிடின்னு பிரிச்சாலும் ‘க்’ அதாவது மெய்யோட ½ மாத்திரை கணக்குல வராது. அதாவது கருப்புப் பணம் மாதிரி. உ - குறில் 1 மாத்திரை. அதுனால கு-வுக்கு 1 மாத்திரை. எப்பூடி?
ரா: கலக்கிட்ட போ. சரி ஆய்த எழுத்துன்னா ’அக்’ அப்பிடின்னு உனக்குத் தெரியும். அதுக்கு ½ மாத்திரைதான்னு முன்னாலேயே சொல்லியிருக்கேன். மீதியிருக்குற சார்பு எழுத்துகள்ல குற்றியலுகரம் மட்டும் வெண்பாவுக்கு ரொம்ப தேவைப்படும். யாப்பு இலக்கணம் பத்திப் பேசும்போது உனக்கு குற்றியலுகரம் பத்தி விளக்கமா சொல்றேன்.
சு: சரி எழுத்து இலக்கணம் இதுவரைக்கும் படிச்சதை வச்சு வெண்பா எழுதிடலாமா? சொல் இலக்கணம் வேணாமா?
ரா: நீ சொன்னது ஓரளவுக்கு கரெக்ட்டுதான். இப்போ நாம நேரா யாப்புக்கு போயிடலாம்.
சு: அப்படிப் போடு

வெண்பா உரையாடல் - பாகம் 2


பாகம் – 2

ரா: முதல்ல எழுத்துலேர்ந்து ஆரம்பிக்கிறேன்.
சு: என்ன கிண்டல் பண்றியா? எனக்கு 247 எழுத்துமே நல்லாத் தெரியும்டா
ரா: இப்படி குறுக்கப் பேசாதடா. முதல்ல தமிழ்ல 247 எழுத்துகள்னு சொல்லி எல்லாரையும் பயமுறுத்துறதை நிறுத்துங்கடா. மொத்தமே 31 எழுத்துகள் தாண்டா இருக்கு.
சு: என்னடா புதுக்கதை உடுற?
ரா; கதையில்லடா. உண்மை. உயிர் 12 மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 31. வரி வடிவத்தையெல்லாம் ஒலி வடிவமா கணக்குல எடுக்காதே. அப்படின்னா இங்கிலீஷ்ல அப்பர் கேஸ் 26, லோயர் கேஸ் 26 மொத்தம் 52 எழுத்துகள்னு சொன்னா ஒத்துக்குவியா?
சு: மாப்ள, புரியுது ஆனா புரியலை
ரா: என்னடா வரும் ஆனா வராது மாதிரி. ரொம்ப ஈஸியான மேட்டர்டா இது. இப்போ நாம படிக்கறப்போ லை, னை யோட வரி வடிவமெல்லாம் வேற மாதிரி இருந்திச்சிடா. அப்புறமா சுலபமாக்கினாங்க. ஆனால் அந்த உச்சரிப்பு ஒலி மாறலை. இங்கிலீஷ்ல நீ அப்படிங்கறதை nee அப்படின்னு எழுதுற மாதிரி தமிழ்ல ந்ஈ அப்படின்னு எழுதவுட்டா 31 எழுத்துகளை வச்சே நீ எழுதலாம்ல. ஆனா அப்படி விடாம நீ அப்படின்னு ஒரு வரி வடிவத்தை உருவாக்கி வச்சிருக்காங்க.
சு. அட, இதுக்குள்ள இவ்வளவு மேட்டர் இருக்கா.
ரா. சரி அதை விடு. நாம் எழுத்து இலக்கணத்துக்குப் போவோம். 2 விதமா எழுத்துகளைப் பிரிக்கலாம். 1. முதல் எழுத்து 2. சார்பு எழுத்து
சு: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா. முதல்ல இலக்கணமே 5 வகைன்னு சொன்னே. ஆனால் 3 தெரிஞ்சுக்கிட்டா போதும்னு சொன்னதால பொறுத்துக்கிட்டேன். இப்ப எழுத்துக்குள்ள 2 வகைன்னா என்னடா?
ரா: டேய், இங்கிலீஷ் கிராமர்ல tenses, voices, noun, verb அப்பிடி இப்பிடின்னு KGலேருந்து படிக்கலை. பொறுமையாக் கேளுடா. எல்லாம் ஈஸியா புரியும். 
சு: சரிடா
ரா: முதல் எழுத்துன்னா நம்ம தமிழ் மொழிக்கு முதலான எழுத்துகள்டா. உயிர் 12, மெய் 18 மொத்தம் 30. உயிர் எழுத்துகளை குறில், நெடில்னு ரெண்டா பிரிக்கலாம். அ, இ, உ, எ, ஒ – குறில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – நெடில்
சு: அது சரி 5 குறிலுக்கு 5 நெடில்தானே இருக்கணும். அது என்னடா ஐ ஒள அப்படின்னு 2 எக்ஸ்ட்ரா பிட்டு இருக்கு.
ரா: அப்புடிக் கேள்டா. ஐ, ஒள இரண்டும் கூட்டுயிர்கள் எனப்படும். ஐ என்பதை அஇ எனவும் ஒள என்பதை அஒ என்றும் இரு உயிர்களைக் கூட்டி சொல்லலாம். இப்பப் புரியுதா ஏன் 5 குறிலுக்கு 7 நெடில் வருதுன்னு.
சு: சூப்பர்டா. நம்ம மொழிக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?
ரா: அதே மாதிரி மெய்யெழுத்துகள் 18-ஐயும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று 3 வகையா பிரிக்கலாம். 
சு. ஆமாம். இதையாவாது அளவா ஆறு ஆறாப் பிரிச்சிருக்கா இல்லை….?
ரா: இந்த நக்கல்தானே வேணாங்கிறது. எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோன்னு ஒரு பாட்டு வருமே அதை மாதிரி ஆறு ஆறா மெய்யெழுத்தைப் பிரிச்சுக்கோ, அது வல்லினம், மெல்லினம், இடையினும்னு தெரிஞ்சுக்கோ. எப்பூடி?
சு: அட இது நல்லா இருக்கே.
ரா: க் ங் இப்படின்னு சொன்னா ரொம்ப நேரமும் எடுக்கும் கஷ்டமாவும் இருக்கும். அதனால் அதை அகர வரிசையிலே சொல்லிக்கலாம். க ச ட த ப ற – வல்லினம், ங ஞ ண ந ம ன – மெல்லினம், ய ர ல வ ழ ள – இடையினம். அதாவது நாம காதலிக்கிறப்போ மெல்லினமாத் தெரியிற பெண்கள், கல்யாணத்தப்ப இடையினமாகவும் கொஞ்ச வருஷம் போனது வல்லினமாகவும் மாறிடுறாங்கன்னு சொன்னா காமெடியா இருக்கும். 
சு: ஏண்டா என் வீட்டில நான் உதை வாங்கணும்னு உனக்கு எவ்வளவு நாளா ஆசை.
ரா: உன்னை அடிக்க வந்தா அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போடு. வல்லினமான பசங்கள்லாம் மெல்லினமான பெண்களின் இடையினத்துக்கு அடிமைன்னு ஒரேப் போடாப் போட்டு எஸ்கேப் ஆயிடு.
சு: மாப்ள இப்ப நீ சொன்னது வெண்பா இல்லையே?
ரா: நண்பா அது வெண்பா இல்லடா ஒரு காமெடி வசனம். சரி எனக்கு வீட்லேருந்து வார்னிங் கால் வருது. அப்புறமா நேரம் இருக்கும்போது எழுத்து இலக்கணத்தை கண்டினியூ பண்ணலாம். 
ராஜாவின் மனைவி: ஏய் ராஜா, வீக் எண்ட்ல வீட்டு வேலைய செய்யாம என்ன வெண்பா அது இதுன்னு யாரு கூட வெட்டியா பேசிக்கிட்டு இருக்க. ஓ சுப்ரமணி நீங்கதானா? நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க.
சு: ஹி ஹி பரவாயில்லை விடுங்க. அசை கத்துக்கணும்னா இந்த வசை எல்லாம் கண்டுக்கக்கூடாது.
ரா ம: சுப்ரமணி என்ன சொல்றாரு?
ரா: அது யாப்பு. சரி மாப்பு நீ கெளம்பு.
சு: யாப்பா, மாப்பு உனக்கு சிஸ்டர் கிட்ட இருக்குடா ஆப்பு. அப்புறம் பார்க்கலாம்டா.

வெண்பா உரையாடல் - பாகம் 1

”வெண்பா வடிக்கலாம் வா” முகநூல் பக்கத்தில், நகைச்சுவையாய் வெண்பாக்கள் எழுதுவதே எங்கள் குறிக்கோள். அதனால், வெண்பா இலக்கணத்தையே நகைச்சுவாய் பேச்சுத் தமிழில் விளக்கினால் என்ன எனத்தோன்றியதன் விளைவுதான் இந்த ”வெண்பா உரையாடல்” தொடர். இது ஒன்றும் புதிய முயற்சியல்ல. ஏற்கனவே இணையத்தில் பலர் இம்முறையில் வெண்பாவை சொல்லித்தர முயன்றுள்ளார்கள். அதனால் இந்த முறையை நான் கண்டுபிடித்தேன் எனச்சொல்லிப் பெயர் வாங்குவது என் எண்ணமல்ல. ஆனால், வெண்பா எழுத யாப்பிலக்கணம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படுத்த வெண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தொடரை எழுதுகிறேன்.

முன்னுரை:

சுப்ரமணியும் ராஜாவும் நண்பர்கள். சுப்ரமணிக்கு புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். ராஜாவுக்கு மரபுக்கவிதை எழுதுவதில் அலாதி ஆர்வம். சுப்ரமணிக்கு வெண்பா எழுத வேண்டுமென்று ஆர்வம் வந்ததால் ராஜாவிடம் வெண்பா இலக்கணத்தை எளிமையாக சொல்லித்தர இயலுமா என்று கேட்டான். ராஜாவும் நண்பனின் கவிதை ஆர்வத்தையும் திறமையையும் நன்கறிந்தவனென்பதால் ஒப்புக்கொண்டான். இனி இவர்களிருவரின் உரையாடலைப் பார்ப்போம்.

பாகம் - 1

சு: மாப்ள எனக்கு மரபுக்கவிதை எழுதணும்னு ஆசை ஆசையா இருக்கு. ஆனா எழுதும்போதுதான் இந்தத் தளை தட்டுது.
ரா: டேய் உனக்கு என்ன குணான்னு நெனப்பா? நேரா விஷயத்துக்கு வாடா.
சு: வெண்பா விதிகள்னு கூகுள்ல தட்டுனா அசை, சீரு ஆப்பு அது இதுன்னு வந்தா எழுதுறவன் கூட எழுத பயப்படுவானா இல்லையா?
ரா: அடேய் அது ஆப்பு இல்லடா யாப்பு
சு: ஆம் அதுதான் அதேதான் கரெக்ட்டு
ரா: ஏண்டா நமக்குப் புரியாத வேற்று மொழியான இங்கிலீஷ் கிராமரை எல்லாம் கத்துக்கிறோம். ஆனா நாம பேசுற தாய்மொழியில எழுதுறதுக்கு ஒழுங்கா இலக்கணம் படிக்க ஒனக்குக் கஷ்டமாயிருக்கு அப்படிதானே?
சு: ஆமாண்டா. நம்ம தமிழ் படிச்ச காலத்துல இலக்கணம் அப்படின்னாலே எஸ்கேப் ஆயிடுவோம். அது இப்ப வந்து இடிக்குது.
ரா: அதுவும் சரிதாண்டா. என்னமோ சுலபமா கத்துக் குடுத்தா நாமெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பராயிடுவோம்னு நம்ம தமிழ் வாத்தியாருங்க நமக்குப் புரியாத மாதிரியே சொல்லி வச்சிட்டாங்க. ரொம்பக் கேள்வி கேட்டா கோனார் நோட்சைக் கையிலக் குடுத்துட்டாங்க. சரி விடு. இப்ப மேட்டருக்கு வருவோம்.
சு: மச்சி கவுண்டமணி டயலாக் சொல்லிக் கலாய்ச்சா மட்டும் போதாது. எனக்கு சுலபமா புரியிற மாதிரி வெண்பா இலக்கணம் சொல்லிக்குடுப்பியா?
ரா: முயற்சி பண்றேன். வெண்பா எழுதறதுக்கு முன்னாடி தமிழ்ல இலக்கண வகைகள் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க. மொத்தம் 5 இருக்கு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
சு: இரு இரு. என்ன எடுத்தவுடனேயே பயமுறுத்துறியே. அஞ்சையும் படிச்சாதான் வெண்பா எழுத முடியும்னா, நா இப்பவே ஜீட் விடுறேன்.
ரா. டேய் கொஞ்சம் இருடா. சினிமா சான்ஸ் கேக்கப் போறப்பயே முதலமைச்சர் நாற்காலியில ஒக்கார்றதுக்கு இது என்ன சினிமாப் பாட்டுல வர்ற சீனாடா? அந்த மாதிரி பாட்டு சீன்லதாண்டா ஒரே பாட்டுல மாடு மேய்ச்ச ஹீரோ பாட்டு முடிய சொல்லோ ஸ்டார் ஹோட்டல் எல்லாம் கட்டுவாரு. இலக்கணம் படிக்கக் கொஞ்சம் நேரம் எடுக்கும்டா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தாதானடா பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கும். நேரா மாடியையேக் கட்டுவேன்னா என்னடா அர்த்தம்?
சு: சாரி மச்சி. 5 கொஞ்சம் அதிகம்டா.
ரா: எழுத்து, சொல் இலக்கணத்தோட அடிப்படை மட்டும் தெரிஞ்சா போதும்டா. நேரா யாப்புக்குள்ள போயி நாம வெண்பா எழுதிடுலாம். ஓகேவா? எதப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்டா. அச்சக் லொச்சக் டொச்சக், காசு பணம் துட்டு மணி மாதிரி எழுத்து சொல்லு யாப்பு மாப்பு புரியுதா?
சு: இப்புடி சொன்னா கொஞ்சம் ஈஸியாயிருக்குடா.